Thursday 10 September 2020

கவிஞர் புதுவை இரத்தினதுரை

 



மாவீரர்கள் துயிலுமில்ல பாடல் உருவான வரலாறு !



1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணாநோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் வாச மலர் ஒன்று வாடிக்கிடக்கின்றது. யாழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
திருமலைச் சந்திரனுடன் பலர் இப்பாடலை பாடினார் இந்தியப் படை இங்கு நிலைகொண்டிருந்த வேளை தமிழ்நாட்டில் புதுவை அண்ணரின் முயற்சியால் புயல் கால இராகங்கள் அந்நியர் வந்து புகல் என்ன சூதி, களத்தில் கேட்கும் கானங்கள், பாசறைப் பாடல்கள், என்பன ஒலிப்பேழைகளாக வெளிவந்தன. 1990 இல் யாழ்ப்பாணத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற ஒலிப்பேழை வெளியீட்டுடன் பல ஒலிப்பேழைகள் வெளிவரத் தொடங்கின வேங்கைகளின் விடுதலை வேதங்கள் என்ற ஒலிப்பேழைக்காக புதுவை அண்ணரால் எழுதப்பட்ட பாடலை தலைவர் மாவீரர் நாளுக்குரிய பாலடலாகக் வேண்டுமென விரும்பியதையடுத்து அந்தப் பாட்டில் சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான பாடலாக வெளிவந்தது.

கண்ணனின் இசையில் வர்ண இராமேஸ்வரனுடன் பலர் அதை பாடினர். அதில் முதல் நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே… ஏன்றிருந்த வரி பின்பு மாவீரர் நினைவொலி நேரம் மாற்றப்பட்டபோது வல்லமை தந்துமே என மாற்றப்பட்டது. இந்ந மாற்றப்பட்ட வடிவமே இன்று நாம் கேட்கும் பாடலாகும். மாவீரர்களை புதைக்கத் தொடங்கிய பின்னே மாவீரர் மயானம் சுடுகாடு, மாவீரர் துயிலுமில்லமென அழைக்கப்பட்டது. 1990 இல் மாவீரர் விபரப் பட்டியலை கூராக்கும் பணி தலைவரால் என்னிடம் தரப்பட்டது.
மாவீரர் படங்கள் அவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டன. மாவீரர் விபரங்கள் அப்போது ஈழமுரசு செய்தித் தாளில் வெளியிடப்பட்டு எம்மிடம் இருந்து. தவறுகள் திருத்தப்பட்டன. இராதயன் அண்ணரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அங்கு மாவீரர் படங்களை தாங்கிய மாவீரர் ஏடு ஒன்று அச்சிடப்பட்டது. தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை அதிலிருந்த தகவல் தவறுகள் காரணமாக அதனை வெளியிட வேண்டாமென தலைவர் கூறியதையடுத்து அது வெளியிடப்படவில்லை.
1990இல் மாவீரர் நாளுக்காக தலைவர் முதன்முதலில் உரை நிகழ்த்தினார். அன்றிலிருந்து அவரது மாவீரர் நாள் உரை தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளை அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்து ஒரு கொள்கை உரையாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.
அந்த உரைக்கு உலகெங்கும் மிகுந்த மதிப்பு தரப்படுகின்றது. 1991ஆம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கண்ணன் வர்ண இராமேஸ்வரன் குழுவினர் மாவீரர் மேடையில் நின்று முதன்முதலில் மாவீரர் நினைவுகூரற் பாடலை பாட கோட்டையிலிருந்து சிங்களப்படை ஓடியது. அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கேணல்.பானு அவர்களால் அங்கிருந்து அதன் தாங்கியுடனையே கோண்டுவரப்பட்ட மணி மூலம் நினைவொலி எழுப்பப்பட அங்கு கூடியிருந்தோர் எல்லோரும் வீரம் பெருமிதம் கவலை என பல்வேறு உணர்வுகளுன் கண்ணீர் மல்க மாவீரரை நினைவு கூர்ந்த அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கையில் மெய் சிலிர்க்கின்றது.
திரு.யோகரட்ணம் யோகி
(2007 ஆம் ஆண்டு)
**


மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை இயற்றியிருந்தார். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார்.
முழுப் பாடல்
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!


கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை!

நாகவிகரையில் பூசை நடந்ததாம்
ரூபவாகினி சொல்லிற்று
இனி என்ன?
“காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும்
சிற்றி பேக்கரியும்
சீனிச் சம்பலும்
நகரப் பகுதியில் அறிமுகமாகும்
புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட
ரத்வத்த வரக்கூடும்
சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா?
எழலாம்.
வெசாக் கால வெளிச்சக் கூட்டை
எங்கே கட்டுவார்?
ஏன் இடமாயில்லை?
வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம்
முனியப்பர் கோவில் முன்றலிலும் கட்டலாம்
பெருமாள் கோவில் தேரிலும்
பிள்ளையார் கோவில் மதிலிலும் கட்டலாம்
எவர் போய் ஏனென்று கேட்பீர்?
முற்ற வெளியில் ” தினகரன் விழாவும்”
காசிப்பிள்ளை அரங்கில் களியாட்ட விழாவும் நடைபெறலாம்.
நாகவிகாரையிலிருந்து நயினாதீவுக்கு பாதயத்திரை போகும்.
பிரித் ஓதும் சத்தம் செம்மணி தாண்டிவந்து காதில் விழும்.
ஆரியகுளத்து தாமரைப் பூவிற்கு அடித்தது யோகம்.
பீக்குளாத்து பூக்களும் பூசைக்கு போகும்.
நல்லூர் மணி துருப்பிடித்துப்போக நாகவிகாரை மணியசையும்.
ஒரு மெழுகுவர்த்திக்காக புனித யாகப்பர் காத்துக்கிடக்க ,ஆரியகுளத்தில் ஆயிரம் விளக்குகள் சுடரும்.
எம்மினத்தின் இளைய தலைமுறையே, கண் திறக்காது கிடகின்றாய்.
பகைவன் உன் வேரையும் விழுதையும் வெட்டி மொட்டை மரமாக்கி விட்டான்.

-புதுவை இரத்தினதுரை-


“அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”


“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டு விட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாத துயரெது?
ஊரிழந்து போதல் தான்.”


“உடல்கீறி விதை போட்டால்
உரமின்றி மரமாகும்
கடல் மீது
வலை போட்டால்
கரையெங்கும் மீனாகும்.
இவளின் சேலையைப் பற்றி
இந்தா ஒருவன்
தெருவில் இழுக்கின்றான்
பார்த்துவிட்டுப்
படுத்துறங்குபவனே!
நீட்டிப்படு.
உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த
அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.
‘ரோஷ’ நரம்பை
யாருக்கு விற்று விட்டுப்
பேசாமற் கிடக்கின்றாய்?”


தூரப் பறந்துவிட்ட துணிவுப்பறவைகளே…


நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்

கண்களிலே….

பூத்ததுபோற் பூத்துப்புன்னகைத்தீர்

எங்களுடன்…

பேசிக்களித்தீர் .. போய்விட்டீர்

தாயகத்தில்..

வீசிவரும் காற்றில்

விரித்த சிறகெடுத்துத்

தூரப்பறந்துவிட்ட துணிவுப்பறவைகளே !

ஈரவிழியிங்கு எமக்கின்னும் காயவில்லை

ஊரறியோம்

உங்கள் உறவறியோம்

தந்தையிட்ட பேரறியோம்

ஆனாலும் புகழறிந்து நிற்கிறோம்.

நெஞ்சினிலே உங்கள் நினைவுக்கு மாலையிட்டு

நஞ்சணிந்தோம்.

நீங்கள் நடந்தவழி நடக்கிறோம்.

தம்பியென்றும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எத்தனை பேர் தனை இரந்தோம்
ஒருவருமே
சத்தியமாயெம்மைத் தலையெடுத்துப் பார்க்கவில்லை
செத்திடுவார் எமக்கேனிச் சோலி
என நினைத்தா விட்டார்??
எனினும் யாம் விழமாட்டோம் எனச் சொல்வாய்!

நாளாந்தம் நோயால் நலிந்தும்,
ஒரு கவளம்
ஆகாரமின்றி அயர்ந்தும்
கூவிவரும் குண்டால் உயிர் கூடு குலைந்தும்
பொல்லாத சண்டைக்குள் வாழும் சனத்தை எவர் நினைத்தார்… ?

வாழ்வைத் தொலைத்தும், வாழ்விடத்தின் வேரறுத்தும்,
பாழ் விதிக்குத் தம்மைப் பறி கொடுத்தும்
ஆகாயப் பந்தலதின் கீழ் வாழும் பாவியரை யார் நினைத்தார்…  ?

குருக்களை நேற்று விசுவமடுவில் கண்டேன்.
அவரும் அகதி..நானும் அகதி….
எல்லோர் வாழ்வும் அவதி….

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இக்கவிதை எழுதப்பட்ட காலகட்டம் 1973. புலிகள் அமைப்பு உருவாகாத காலகட்டம். பின்னர் அவர் புலிகள் அமைப்புடன் இணைந்ததை இக்கவிதையுடன் ஒப்புநோக்குவதும் பொருத்தமானதே. அக்கவிதையின் தலைப்பு: புலிகள் ஆவோம். அக்கவிதையில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:

பெற்றதாய் எதிராய் வந்து
புரட்சியின் போது ஏதும்
குற்றங்கள் செய்தா லெங்கள்
குண்டுகள் அவளின் நெஞ்சைப்
புற்றுகள் ஆக்கும், ஆமாம்
புரட்சியின் போது நாங்கள்
சுற்றமும் துணையும் பாரோம்.
சூடு காண் புலிகள் ஆவோம்.

நேற்று நாம் பேசா வூமை
நோயர்கள், ஆனாலின்று
காற்றைப்போற் கிளர்ந்தெழுந்து
காரியம் முடிக்க வல்ல
கூற்றுவர், சுரண்டி வாழும்
கும்பலை அரைத்துத் தின்னும்
மாற்றத்தை விரும்பி வந்த
மாபெரும் உழைப்பாளர்கள்.

புலிகள்' ஆவோம்' என்ற இக்கவிதையில் அவர் எழுதியுள்ள,

"பெற்றதாய் எதிராய் வந்து
புரட்சியின் போது ஏதும்
குற்றங்கள் செய்தா லெங்கள்
குண்டுகள் அவளின் நெஞ்சைப்
புற்றுகள் ஆக்கும், ஆமாம்
புரட்சியின் போது நாங்கள்
சுற்றமும் துணையும் பாரோம்.
சூடு காண் புலிகள் ஆவோம்."

என்னும் வரிகள் புலிகள் என்னும் அமைப்பு உருப்பெறுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். ஆனால் புதுவையாரின் மனப்போக்கினை வெளிப்படுத்தும் மேலுள்ள வரிகள் பின்னாளில் உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் நிலைப்பாடாகவும் இருந்ததைப் பார்க்கும்போது ஏன் புலிகள் அமைப்பில் புதுவை இரத்தினதுரௌ இணைந்துகொண்டார் என்பதற்கான காரணங்களிலொன்றாக இம்மனப்போக்கும் இருக்கலாமோ என்னும் ஐயத்தினையும் ஏற்படுத்துகின்றது.

ஒரு விதத்தில் இக்கவிதையினைப் புதுவையின் தீர்க்கதரிசனம் மிக்க கவிதையாகவும் கூறலாம். இக்கவிதையை எழுதிய கால கட்டத்தில் அவர் வர்க்க விடுதலைப்புரட்சிக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரே நினைத்திருக்க மாட்டார் பின்னாளில் தேசிய விடுதலைக்கவியாக அவர் உருமாறுவாரென்பதை. அதுவும் புலிகள் அமைப்பில் சேர்ந்து போராடப்போகின்றாரென்பதை.

புலிகள் அமைப்பில் அவர் இருந்தபோது அவர் எழுதிய உணர்ச்சிக் கவிதைகளைப்பார்த்து ஒருவேளை அவர் புலிகளில் இருப்பதால்தான் அவ்விதம் எழுதுகின்றாரோ என நான் எண்ணியதுண்டு. ஆனால் அவரது ஆரம்பக்காலத்து வர்க்கவிடுதலை எழுச்சிக் கவிதைகளைப்பார்த்தபோது ஒன்று புரிந்தது; புரிகின்றது. அது: போர்க்குணமென்பது புதுவையாரின் இயற்கையான உண்மையான அவரது உணர்வுகளின் வெளிப்பாடு. அதனைத்தான் வரதபாக்கியான என்று அவர் எழுதிய கவிதைகள் புலப்படுத்துகின்றன.


************************************************************


'எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்
நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்"
என்ற கவிஞர் சுபத்திரனின் கவிதை அன்றைய சூழலின் கொதிநிலையை, சங்கானை நிகழ்வை எடுத்துணர்த்துவதாகும்.
அதேபோல் மஹாகவியின் தேரும் திங்களும் கவிதை:
'கல்லொன்று வீழந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு,
சில்லென்று செந்நீர் தெறித்து
நிலம் சிவந்து,
மல்லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்."
மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலின் நிகழ்வை இக்கவிதை படம்பிடிக்கின்றது.
இதேவேளையில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று இப்படிச் சொல்கின்றது.
'சாதி வழக்கத்தை தள்ளிவை - அதைச்
சாத்திரம் என்றிடில் கொள்ளிவை
நீதி வரும்வரை மோதி நில் - சாதி
நீசரை போரிடை நின்று வெல்."








Saturday 24 November 2018

அறிவும‌தி– கவிதைகள்- நட்புக்காலம்





இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.!
-அறிவுமதி (சிறைச்சாலைக்காக)

 

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.

-அறிவுமதி

 

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
-அறிவுமதி

நீரோட்ட‌ம்!

—-அறிவும‌தி—-

கர்நாடகாவிலும்
இந்து!

தமிழ் நாட்டிலும்
இந்து!

இந்துக்கு இந்து
குடிநீர் த‌ர‌மாட்டாயா

இதுதானா இந்துத்துவா
உங்க‌ள்
தேசிய‌
நீரோட்ட‌ம்!

செம்மொழி‍ – காரணப் பெயர்

—-அறிவும‌தி—-

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

பிழைக்கும் வழி

—–அறிவும‌தி—–

மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!

நட்புக்காலம்

புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

***

வெறுமையான நாட்குறிப்புகள் –

குறிப்பதற்கு ஏதுமற்ற நாள்.

குறிப்பதற்கு உன்னை சந்திக்கவில்லை.

அதனால், நாட்குறிப்பும் வெறும் தாளாயிற்று.

நீயன்றி வேறோர் உலகம் என்று ஒன்றிருந்தால், நாட்குறிப்பிற்கு எத்தனை எத்தனையோ செய்திகள் கிடைத்திருக்கும்.

நீயும் நின் நட்பும் மட்டுமே என் உலகம் என்று ஆகிப் போன பின், உன் சந்திப்பைத் தவிர வேறென்ன நிகழ்வு குறிக்கத் தக்கதான செய்திகளாகி விடும் எனக்கு?

அதனால் அந்தப் பக்கங்கள் வெறும் பக்கங்களாகி விட்டன.

உதடு விரிந்து நீ புன்னகைக்கும் பொழுது, வெளிப்படுமே உன் பல்வரிசையின் வெண்மை – அந்த வெண்மையைப் போல் களங்கமின்றி, பளிச்சென இருக்கும் அந்த வெற்றுக் காகிதங்கள் – ஒரு வேளை உன் புன்னகைகள் தானோ?

***

கடைசி மழைத்துளி – ஹைகூ கவிதை

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ… நான்

***

ஆயுளின் அந்தி வரை

நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்

வானவில் கொடுத்து
மழை தூவிவிட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்

கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்

பூத்த நெருப்பு

பூத்த நெருப்பு

அறிவுமதி

*
என்
மரணம்
அது
கண்ணீரை யாசிக்கும்
பிச்சைப்
பாத்திரமன்று

கவிதைக்குள்
முகம் புதைத்து
யாரங்கே
கதறியழுவது
என்
மரணம்
இரங்கற்பா
எழுதுவதற்கானதும்
அன்று

சவுக்கு மரத்து
ஊசி இலைகளில்
சறுக்கி விழுகிற
பனித் துளிகளாய்
நீங்கள் சிந்தும்
கண்ணீர்ச் சொற்களால்
என் பெயரை உச்சரிக்காதீர்கள்

பூமி
இது தண்ணீரின் கல்லறை
கடல்
அது
பூமியின் சமாதி
என் வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசுவதால்
கவிதையை
நீங்கள்
கெளரவப்படுத்தலாம்
வாழ்க்கையை
கெளரவிக்க
இந்த
வண்ணங்கள்
என்ன செய்யும்

மின்னல்
இருளின் விரோதியன்று
அது
மழையின் விளம்பரம்

கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே
காதலிக்கத் தெரிந்த
உங்களின்
கவிதைகள் கூட
காதல் தோல்விகளின்
கண்ணீர்
விளம்பரங்கள்தாமே

காதலையே
வெற்றிகொள்ள முடியாத
கோழைகளே
கவிஞர்கள் என்றால்
ஓ…
கவிஞர்களே
இந்த
வீரமரணத்தை
நீங்கள்
ஈரப்படுத்தாதீர்கள்
தூரப் போங்கள்
போய் விடுங்கள்

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

நேற்றுவரை
உங்களோடு
மலை முகடுகளில்
விவாதித்துச்
சேரி வீதிகளில்
வில்லுப் பாட்டிசைத்த
வீரக்
கவிமகன்தான்…இதோ
சாம்பற்
பொட்டலமாய்
உங்களைச்
சந்திக்க
வந்திருக்கிறேன்

தோழர்களே
என்
மரணம்
நிஜமானது
மாரடைப்புத்தான்
பொய்யானது

ஆம்
மரணம் எனக்கு
ஊட்டப்பட்டது

வேர்களைப் பற்றிய
விபரங்கள் புரியாமல்
விழுதுகள்
வெட்டப்படுகின்றன

கசக்கிப்
பிழிந்து
ருசித்துச்
சுவைத்த பின்
தூக்கி எறியப்படுகிற
மாங்கொட்டைகள்
மரங்களாய்
விஸ்வரூபமெடுக்கும்
என்பதை
இவர்கள்
மறந்து போயிருக்கிறார்கள்

கோழிக்
குஞ்சுகளைக்
காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளைக்
கலைக்கத் துடிப்பது
குற்றமா என்ன

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

ஒரே
ஒரு நிமிட
மெளன அஞ்சலியும்
வேண்டாம்

புறப்படுங்கள்
தொடரட்டும் நமது
மக்கள்பணி






















Monday 11 May 2015

காசி ஆனந்தன் கவிதைகள்

 

 








குமுறல்




செருப்பு
ஆண்ட நாள்
அது
என்கிறாய்
 சொல்
செருப்பைச்
செய்தவன் 
ஆளும் நாள்
எது?
*******


போராளி
செத்தவனுக்காக
அழுதவன்
நீ
 இவன்
அழுதவனுக்காக
செத்தவன்
******


இயக்கம்
வைக்காதே சிலை
தொளிலாளிக்கு
எங்கும்
செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும்!
******


வல்லாண்மை
பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன்!
******


வெற்றி சூடுவோம்!

இந்தி வந்து செந்தமிழ்க்கு வாயின் மண்ணை
இட்டு வைக்க நாங்கள் விட்டு வைக்கவோ?
மந்தைபோல வாழ்விழந்து நொந்து கெட்ட
மானவாழ்வில் ஊறுபட்டு நிற்கவோ?
தந்தையர்கள் ஆண்டுலாவி மாண்பு தந்த
தாயகத்து மண்ணை இன்று விற்கவோ?
பொந்துபட்ட மார்பினோடு குண்டுபட்ட
போர்க்களத்தில் ஆடிவெற்றி சூடுவோம்!
ஏடு கட்டி நாம் வளர்த்த காவியத்தை
இன்று வந்த செல்லரித்துப் போகவோ?
கூடுகட்டி நாம் வளர்த்த கிள்ளை ஒன்று
கொல்லவந்த பூனைவாயில் வீழவோ?
நாடுகட்டி நாம் வளர்த்த செந்தமிழ்க்கு
நச்சு மாந்தர் ஊறுசெய்து வாழவோ?
பாடுபட்டு நம்மை வீழ்த்த வந்த மேனி
பாதி பாதி ஆனதென்று பாடுவோம்!
நீதியோடு வீரவாழ்வு கண்டிருந்த
நெஞ்சமின்று போர்முகத்தில் அஞ்சவோ?
நாதியற்று வீடடைந்து மூலைபார்த்து
நாணி நின்று கட்டில் பார்த்துத் துஞ்சவோ?
ஆதியானை செந்தமிழ்க் குலத்து மக்கள்
அற்பர் கால் பிடித்துநின்ற கெஞ்சவோ?
வீதியெட்டிலும் முழங்கு தானையோடு
வீறுகொண்டு தோளுயர்த்தி ஆடுவோம்!



தமிழர் விடுதலை!

இந்த ஆண்டில்..... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்க மாட்டார்கள் எங்கள்
தோழர்கள் கூண்டில்!
எட்டுத் திசைகளும்
நின்ற இருட்சிறை
விட்டுக் கதிரொளி
வெளியே குதித்தது!
மொட்டுத் தளைகள்
உடைத்தது தாமரை
சிட்டுக் குருவி
சிறகை அவிழ்த்தது!
இந்த ஆண்டில்..... இன்றேல்
இருக்க மாட்டார்கள் எங்கள்
தோழர்கள் கூண்டில்!
முப்புறம் சிறை
கொண்ட மலைகளை
ஒப்பிலா மலை
ஆறு தகர்த்தது!
குப்புறக்கடல்
காற்றைக் கவிழ்த்தது!
சிப்பி உடைத்தொரு
முத்துச் சிரித்தது!
இந்த ஆண்டில்...... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார்கள் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

தமிழன் கனவு
 
பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!
தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்
கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்....
கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும் போதாதோ?
ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய
மேவியவள் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்
நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து
மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!

குமுறி எழடா!

உன்னை எடுத்தெறி தமிழா!
ஒதிய மரம்போல் நின்றனை பேடி!
அன்னை துடித்திடல் அழகா?
அவள் படுந்துயர் எத்தனை கோடி!
தன்னை மறந்தொரு வாழ்வா?
தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?
முன்னைக் கதைகள் அளப்பாய்....
முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?
மேடையில் தமிழ்விழா வைப்பாய்!
மேனிசிலிர்க்க வெறும்வாய் பிளப்பாய்!
ஓடைத் தவளைபோல் கத்தி
உலகில் என்னதான் பண்ணிக் கிழிப்பாய்?
பாடை உடன்கொண்டு வாடா!
பகைவன் களத்தே விழப்பாய்! அழிப்பாய்!
பீடை தொலைவதெந்நாளோ?
பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய் விழிப்பாய்!
எட்டி உலகினை நீ பார்!
எங்கும் விடுதலை வாழ்வே இருக்கும்!
கட்டி உனைமட்டும் போட்டார்!
கைவிலங்கென்று நொறுங்கிப் பறக்கும்?
தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா.... விடுதலை பிறக்கும்.




தமிழ் உணர்வு

தமிழென் அன்னை! தமிழென் தந்தை!
தமிழென்றன் உடன் பிறப்பு!
தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை!
தமிழென் நட்புடைத் தோழன்!
தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்
தமிழென் மாமணித் தேசம்!
தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்!
தமிழே என்னுயிர் மூலம்!
என்றன் தமிழுடல் எழவே எழுவான்
எழுதமிழ் வானின் பரிதி!
என்றன் தமிழ்மூச் சென்பது தமிழாம்
எறிவான் இடிபுயல்! அறிதி!
என்றன் தமிழ்நரம் பினிலே பாயும்
எரிதழல் ஆற்றுக் குருதி
என்றன் தமிழை எவன் பழித்தாலும்
எமன் அவனைத் தொடல் உறுதி!
நான் தமிழனடா! நானொரு தமிழன்!
நாற்றிசையும் இது மொழிவன்!
நான் ஒரு வெறியன் எனநகை செய்வோன்
நற்றமிழ் அறியான் இழிஞன்!
நான் உயர்தமிழின்; வளமணர் தமிழன்!
நந்தமிழ் எழயான் எழுவன்!
நான் இழிகழுதை அல்லன்..... வலியன்!
நானிலத்தீர்! இது தெளிமின்!


பேயன்

அருவண்ணத் தமிழ் மண்ணில்
ஆரியனை முன்போர் நாள்
வருக என அழைத்திங்கே
வாழ்வித்த முதுதமிழன்
சுருள்குடுமி ஆரியனின்
சூழ்ச்சிக்கே பலியானான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!
கருநெஞ்சன் வங்கத்தான்
கயவன் விசயனென்பான்
வருபோதில் இலங்கைமண்
வாசல் திறந்துவைத்த
உருகுவிழல் மனத்தமிழன்
ஒளிஈழம் பறிகொடுத்தான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!
அரு ஞாலத் திசையெல்லாம்
அங்கெல்லாம் இங்கெல்லாம்
கருகி உழைத்து வளம்
கனிவித்த உயர் தமிழன்
எருவாகிப் பிறன்வாழ்வை
எழிலாக்கித் தான் மாய்ந்தான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!
திருவோங்கு பாரதம்
தெய்வமென்றும் சிங்களம்
தருசுகமே சுகமென்றும்
தனை மறந்த பெருந்தமிழன்
ஒருநாடு தனக்கின்றி
ஊர் ஊராய் உதைபட்டான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர் தமிழன்!
அருளாளன் எந்தமிழன்
அனைத்தூரும் ஊரென்றான்.....
எருமை இவனை ஒருவன்
ஏ! கள்ளத் தோணி|| என்றான்!
பொருமி எழா இழிதமிழன்
பொறுத்திருப்போம் என்றானே....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

எழுச்சி

பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்!
போராட நாள் குறித்தோம்!
எறிகுண்டு பாய்ந்தாலும் இருகைகொண்டேற்போம்!
எதற்கும் நாம் துணிந்துவிட்டோம்!
நெறிகெட்ட பகைவரின் முறைகெட்ட வாழ்வால்
நெருப்பாக மாறிவிட்டோம்!
வெறிகொண்டு தாவினோம்! வீரத்தின் மடியில்
விளையாடத் தொடங்கிவிட்டோம்!
திசையெட்டும் அதிரயாம் பறைகொட்டி நின்றோம்!


தெய்வத்தை வணங்கி வந்தோம்!
தசையெலாம் முறுக்கேறி நின்றோம்! எழுந்தோம்!
தாயின் மேல் ஆணையிட்டோம்!
வசைகெட்டு வாழாத வரலாறு கொண்டோம்!
வல்லமை நூறு கொண்டோம்!
இசை பெற்ற மிளிர்கின்ற எதிர்காலம் ஒன்றை
இப்போதே செய்து வைப்போம்!
கடல் பொங்கினாற்போல் உடல்பொங்கி வந்தோம்
களத்திலே ஆட வந்தோம்!
படைகொண்டு மானத்தின் நடைகொண்டு வந்தோம்


பழி தீர்க்க ஓடி வந்தோம்!
திடல் பள்ளமாகத் திசைகள் நடுங்கத்
திடுதிடுமென்ன வந்தோம்!
தடைகளை வெல்வோம்! விடுதலை கொள்வோம்!
தமிழர் யாம் ஓயமாட்டோம்!
மறங்கொண்டு விளையாடும் திறங்கொண்ட தமிழர்
மலைகொண்ட தோள்கள் கொண்டோம்!
முறங்கொண்டு பலியோடு மோதினோம் அந்த
மூச்சோடு போராடுவோம்!
புறம்கொண்டு வாழ்வெலாம் புகழ்கொண்டு நின்றோம்!
புதியதோர் ஏடு செய்வோம்!
அறங்கொண்டு நின்றவர் அனல்கொண்டெழுந்தோம்!
அன்னையை வாழ வைப்போம்!

களை எடுப்பு

களை எடுப்போம் வாரீர் தமிழரே!
தமிழரைக் காட்டிக் கொடுக்கும் தமிழர்
தலை எடுப்போம் வாரீர்! மீண்டும் நாம்
தலையெடுக்க வேண்டுமாயின் இவரை
முளை தனிலே கிள்ளி எறிதலே
முதல் வேலை! ஓடிப் புறப்படுங்கள்!
கொலை நெடுவாள் தூக்கி இவர் சிந்தும்
குருதியில் பகைவரை மூழ்கடிப்போம்!
நெடுங்கடலை நாங்கள் அடக்கலாம்
புயலை நிறுத்திப் போர் செய்திடலாம்
சுடும் அனலை வென்று நொடிப்பொழுதில்
கொடியும் தூக்கலாம் போராடி மாற்றார்
விடுங்கணைகள் கோடி எனினும் போய்
எதிர் நின்று வெற்றி கொண்டு வரலாம்!
கொடுங் களைகள் இருக்கும்வரை நாங்கள்
இவை செய்யோம்! களை கொளுத்துவீரே!
நிறை கருவில் எமைப் பல திங்கள்
சுமந்த தாய் எனினும் சரியே இன்னல்
சிறிதளவுமின்றி எமை வளர்த்துச்
சிறப்பீந்த தந்தை எனினும் சரியே
உறுபகைவர் நட்பில் மகிழ்ந்தெங்கள்
தமிழுக்குலை வைப்பராயின் ஓடி
வெறியோடவர் உடலம் வீழ்த்துமின்கள்!
அதன்பின் போர் விழாவும் நடத்திவைப்போம்!

தோழரே
 
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
பட்ட நரம்பில்
பழையபடி செந்நீர்
சொட்ட உணர்ச்சி
சுரக்க விரைந்தோடி....
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
மானம் உறங்கியது!
மான மறத்தமிழர்
தானை உறங்கியது!
தாவி விரைந்தோடி....
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!
மணித் தமிழன் கண்ணீர்
மறைய உலகில்
தனித்தமிழன் ஆட்சி
தழைக்க விரைந்தோடி....
தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

காதலியே! 

காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
வாதையுறவோ இவனைக் காதலித்தாய்?
சாதலுறவோ இவனைக் காதலித்தாய்?
புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
கல்நெஞ்சக் காரனை ஏன் காதலித்தாய்?
களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்?
சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
துயில்கொள்ளும் எழில்மாதர்வாழும் மண்ணில்
முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்?
பொறு கண்ணே! போர்வாழ்வு நெடுநாள் இல்லை!
பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
சிறுகாலில் விழஓடி வருவேன் அத்தான்!
தித்திக்கும் முத்தம் என் செவ்வாய்க்கேதான்!

முரசொலி

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செந்தமிழ் நாட்டின் தீராப் பிணிகள்
போம் போம் போமென முழங்கு முரசே!
புன்மைகள் தீரப் பொங்கி முழங்கு!

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செவ்வழி உடையோம் செருமாண் தமிழர்
யாம் யாம் யாமென முழங்க முரசே!
யானைகள் புலிகள் ஆனோம் முழங்கு!

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
சிறைமதில் சாய்ந்து சிதறிப் போமா?
ஆம் ஆம் ஆமென முழங்கு முரசே!
அரசொடு தமிழன் ஆளமுழங்கு!

தீம் தீம் தீமென முழங்க முரசே!
தீயவெம் பகைவர் ஓடமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தேச விடுதலை பாட முழங்கு!

தமிழ்மேல் ஆணை!
 
தாயே.. தமிழே!
தலை கவிழ்ந்த பொற்செல்வி!
நீ கலங்க வேண்டாம்..
வருங்காலம் நின் காலம்!

அன்னாய்.. இது கேள்!
அடுத்த பரம்பரையில்
பொன்னால் முடி நீ
புனை நாள் இவண் செய்வேன்!
எள்ளி நகைத்து
நினைப்பழிப்போன் செந்நீர்
வெள்ளம் குளித்து
விளையாடுவேன் தாயே!

சத்தை இழந்த தமிழ்ச்
சாதி பிழைக்க நான்
பத்தாயிரங் கவிதை
பாடாமல் போவேனோ?

தாயே! துயரம்
தவிர்த்திரடி.. மாற்றானை
நாயாய் அடித்து
நடுத்தெருவில் வைக்கின்றேன்!

என்னுயிரைத் தூக்கி
எறிந்து தமிழணங்கே
அன்னை நினதுயிராய்
ஆவேன் நான்... ஆணையடி!

செத்த நாள்

ஆடா மயிலாய் அசையா இளங்கொடியாய்
ஓடா நதியாய் ஒரு புதிராய்
நாடெல்லா...
வீசாத தென்றலாய் வீசும் தமிழ்ப் பெருமை
பேசாத வாய் பிணத்தின் வாய்!

புறமும் அகப்பாட்டும் காப்பியனால் பூத்த
இறவா இலக்கணத்தின் ஏடும்
குறள் மொழியும்
ஆர்க்கும் சிலம்பின் அழகு தமிழ் நடையும்
பார்க்காத கண் பாவக்கண்!

கத்து கடல்பறித்தும் கல்லாதார் தீவைத்தும்
குத்து வடமொழியின் கூர்பட்டும்
இத்தனைக்கும்...
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின்
ஆடாத கால் ஆனைக்கால்!

வானம் அளவு வளர்ந்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்த தமிழேட்டில்
ஈனம்
படைக்க வந்தாரா? அவர் பல்லை ஓங்கி
உடைக்காத கை உலக்கை!

ஆளிருந்தால் என்ன? அழகிருந்தாலும் என்ன?
நீள்விழியார் நெஞ்சில் நிறைந்ததென்ன?
கேள் தோழா!
வையம் புகழும் தமிழ்க்கவிதை என் வாழ்வில்
செய்யாத நாள் செத்த நாள்!

மண்

மண்ணில்
உழவனின் வாழ்க்கை
அறுவடைக்கு முன்

உழவனின்
வாழ்க்கையில் மண்
அறுவடைக்குப் பின்

பெருமூச்சு

வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?

பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழைடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்து நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ? 

அண்ணனை இழந்தோம்

எண்ணா திருப்பமோ? ஏங்கோ திருப்பமோ?
எமை உருவாக்கிய தலைவன்
கண்ணாய் இருந்தவன் உயிராய் இருந்தவன்
காலமா னான்என்று சொன்னார்...
புண்ணாகி நெஞ்சம்புலம்பா திருப்பமோ?
புரளா திருப்பமோ நெருப்பில்?
அண்ணாவை அவன் தண்ணார் தமிழ்செயும்
பொன்நாவை யாம்இழந் தோமே!

நந்தமிழ் மண்ணை அழித்தவன் வடவன்
நடுங்க எழுந்தஎந் தலைவன்!
இந்தியை ஓடஓட விரட்டி
எழிலார் தமிழ்காத்த வீரன்!
பந்தென உதைபட் டிருந்த எந்தமிழனை
பாய்புலி ஆக்கிய வேங்கை!
செந்தமிழ் நாட்டைச் செந்தமிழ்நாடாய்ச்
செய்த செந் தமிழனை இழந்தோம்!

பழுத்தவெண் தாடிவேந்தர் எம் பெரியார்
பாசறை வீரனாய்ப் பழுத்தான்!
கழுத்தினை நெரித்த ஆரியர் கண்முன்
கழகம் எனும் தீ வளர்த்தான்!
முழுத்திறன் கொண்டு தமிழ்நிலம் காத்தான்!
மொழிகாத்தான்! இனம் காத்தான்!
விழுத்த முடியாத வீரனாய் நிலைத்தான்!
வீழ்ந்தான் எனும்செய்தி பொய்யே!

கடமை கண்ணியம் கட்டுப் பாடெனும்
கட்டளை தந்தவன் அண்ணன்!
‘உடல்விழ நேரினும் உரிமை விழவிடோம்
உறுதி!’ என் றார்த்தவன் அண்ணன்!
மடமை இருள்தனை மாய்க்கும் சுடரொளி
மண்மிசை வைத்தவன் அண்ணன்!
அட! இன் றாருயிர் அண்ணனை இழந்தோம்
அறிஞனை இழந்தோம்... இழந்தோம்!

எழில்மிகு தாஜ்மகால் மண்ணிடை வீழ்ந்தால்
இன்னொரு தாஜ்மகால் செய்வோம்!
பழம்பெரும் சீனப்பெருமதில் சாய்ந்தால்
பத்துநாளில் அது படைப்போம்!
ஒளிர்பனி இமயம் வீழினும் மற்றோர்
உயர்நெடு மலை உடன் எடுப்போம்!
அழஅழ எங்கள் அண்ணா மறைந்தான்
அவனையாம் எவ்வணம் கொணர்வோம்?

இனமானப் புலி எங்கே?

இன்றிருந்த பகல்தனிலே
ஞாயிறில்லை!

இரவினிலும் நிலவில்லை!
விண்மீன் இல்லை!

இன்றெரிந்த விளக்கினிலே
வெளிச்சம் இல்லை!

இன்றிதழ்கள் ஒன்றிலுமே
முறுவல் இல்லை!

எந்தமிழர் மனத்திந்நாள்
இயக்கம் இல்லை!

இன்றெமது நாட்டினிலே
பெரியார் இல்லை!

எவர்தருவார் ஆறுதல்? இங்
கெவரும் இல்லை!


கோல்தரித்து நேற்றுலகைத்
தமிழன் ஆண்டான்!

கொற்றவனை அவனை இழி
வாக்கி மார்பில்

நூல்தரித்து மேய்ப்போராய்
நுழைந்த கூட்டம்

நூறு கதை உருவாக்கி
பிரம்ம தேவன்

கால்தரித்த கருவினிலே
தமிழன் வந்தான்

காணீர்’ என்றுரைத்தமொழி
கேட்டுக் கண்ணீர்

மேல்தரித்து நெஞ்சில் வெந்
தழல் தரித்து

வெகுண்டெழுந்த பெரியாரை
இழந்து விட்டோம்!


அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியா வீரர்

அறவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்

நெஞ்சுரமும் நிமிர்நடையும்
படைத்த வல்லான்

நிறைமதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்

துஞ்சுதலும் உடற்சோர்வும்
இலாப் போராளி

தொடுபகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை

நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்

நடுவழியில் எமைநிறுத்தி
நடந்ததெங்கே?

நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு 
 
செந்தமிழர் மாவீரர் வன்னியசிங் கத்தை நாம்
வெந்தழலில் வைத்தோம்... விடுதலையே
சிந்தனையாய்
நின்றார் அறவீரர்! அன்னார் உயிர் நீஏன்
கொன்றாய்? கொடுஞ்சாவே கூறு!

அஞ்சிப் பகைவர் அதிர்ந்து நிலைகுலைய
நெஞ்சில் கனல்தாங்கி நின்றானை
வெஞ்சிறையில்
பொன்னாய்ப் பழுத்த புகழுக் குரியானை
எந்நாள்யாம் காண்போம் இனி?

பாரில் தமிழர் படைவெல்லப் போராடி
போரில் கொடுமை பொழுதெல்லாம்
நேரில்
விருப்பாய் மகிழ்ந்தேற்ற வீரர் மறைந்தார்!
நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

ஆற்றல் மிகுபேச்சால் ஈழத்திலே சூறைக்
காற்றை எழுப்பியவன் கண்துயின்றான்!
நாற்றிசையும்
பொங்கு தமிழ்முழக்கம் செய்த களத்தின்போர்ச்
சங்கை நொறுக்கியதோ சாவு?

கண்ணின் மணித்தலைவர் செல்வா வழிகாட்ட
மண்ணில்அவர் கொள்கை மணிவிழியாய்
எண்ணி
இனம்வாழ வாழ்ந்தார் இலையே எவ்வண்ணம்
மனம்தேறும் எங்கள்தாய் மண்?

நீயா தமிழனின் பிள்ளை?

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

தமிழன் முதுகெழும்பைக் காணவில்லை

தமிழன் முதுகெழும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெழும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்து விட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன? 

குரல் நிறுத்திய குயில் 

கழுத்து நிமிர்ந்த தமிழின் வேங்கை
கனலாய் வாழ்ந்த தமிழன்

எழுத்து நிமிர்ந்த பாடல் படைக்கும்
எழுச்சிப் புலவன் வீரம்

பழுத்து நிமிர்ந்த புரட்சிச் செம்மல்
பாயும் புயலாய் எம்மை

இழுத்து நிமிர்ந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!


போற்றப் பிறந்த களத்தின் பொருநன்
புன்மை உற்றிழிந்த எம் வாழ்வை

மாற்றப் பிறந்த மாபெரும் ஆற்றல்
மறந்திகழ் இனப்போர் மண்ணில்

ஆற்றப் பிறந்த அருந்தமிழ் வீரன்
ஆரியர் நெஞ்சில் கூர்வாள்

ஏற்றப் பிறந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்! - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? - புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!

எத்தனை பெரிய மனம் உனக்கு?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! - உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! - உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!

எழுவாய் நீ நெருப்பாய்

தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!
தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!

உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!
பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!

இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!
வசையாரும் பாடினால்...
வரலாற்றை விளக்கு!

மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!
உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!

தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்!
தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்

தமிழை கல்விமொழி ஆக்கு

தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே- என்

பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!

மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!

அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!

ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?

பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?

பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?

பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!

வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!

வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!

வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!

பாவலரே!
 
என்ன கவி எழுதுகிறீர்
பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!

கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்

செந்நெருப்பு விழிகொண்டு
சீறியெழ மாட்டீரோ?
சீச்சி! வானில்

புண்ணிருந்தால் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!

பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையென்னும்
பூவை அந்நாள்

செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்

சங்க மணித் தமிழ்தந்தாள்...
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில

தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!

ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?

தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?

வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்

நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்திமின்கள்!

சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்... மாற்றார்

பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி

வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்

சொல்லெடுப்பீர்... பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்!
அதுவும் நன்றே!

ஏன் இந்த நடிப்பு?

கைத்தட்டத்தானா உன் கை? - தமிழா!
கைத்தட்டத்தானா உன் கை

வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை - உன்

கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை ?

ஆட்சி இழந்தாய்
திசைதோறும் அலைந்தாய்! - வெறும்

காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைத்தாய்!

காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைந்தாய்!

என்னடா உனக்கு
என்றென்றும் உதையா? - உன்

முன்னவன் இமயம்
வென்றானே - கதையா?

கொடுமை மறந்தா உன்
கை ஓசை வெடிப்பு ? - அட !

அடிமை உன் வாழ்வில்
ஏன் இந்த நடிப்பு?


அட தமிழா!

என்னருந் தமிழா!
ஏனடா... ஆண்டான்

புண்ணினை நக்கிப்
போட்டதை விழுங்கும்

உண்ணி நாயானாய்
ஒழிந்ததோ மானம்?

கண் சிவந்தோடிக்
களம் புக வாடா!

ஆண்டவன் அன்றோ?
அட தமிழா நீ

பாண்டியன் அன்றோ?
பாரடா உன்னை

ஈண்டு மாற்றார்கள்
எச்சிலால் வளர்த்தார்...

கூண்டினை நொறுக்கு!
குதியடா வெளியே!

உரிமை இழந்தாய்!
ஊழியஞ் செய்தார்!

வரிகள் கொடுத்தாய்!
வளைந்து பிழைத்தாய்!

விரிபழம் புகழை
விற்றனை பாவி!

எரிமலை ஆகடா!
எழுக! நீ எழுக!

தூக்கடா வாளை!
தோளை உயர்த்தடா!

தாக்கடா பகையை !
தலைகளை வீழ்த்தடா!

நீக்கடா தளையை!
நிமிர்ந்து நில்லடா!

ஆக்கடா கொற்றம்!
ஆளடா இன்றே!





நறுக்குகள்



முரண் 

இறைவனின் வாகனம் என்றான் நாயை

அவதாரம் என்றான் பன்றியை

இறைவனே என்றான் குரங்கை

இவனே திட்டினான் என்னை

நாயே!பன்றியே!குரங்கே!





அடக்கம்
அடக்கம் செய்யப்படுகிறோம்...

இரண்டு பெட்டிகளில்.

சவப்பொட்டியிலும்

தொலைக்காட்சிப் பெட்டியிலும்




நாற்காலி

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை

நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.

வீடு தூங்க கட்டில்

நாடு தூங்க நாற்காலி




உலகமைதி 

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்

புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.

போராடிக்கொண்டிருக்கி றது அமைதி.



ஞானம்

ஞானம் பெற்றது

நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்

கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்

பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.



அடி 

கலையை கலைஞனை

போற்றிய நாடிது என்கிறாய்...

காலம் காலமாய்

பறையை பறயனை தாழ்த்திய நீ.




பாடம்

புரட்சியாவது வெங்காயமாவது

என்கிறாய்

தெரிந்து பேசு

காயப்படுத்தியவனின் கண்ணீரை

வாங்கும் வெஙகாயம்.

சென்னிரை வாங்கும் புரட்சி




ஆணாதிக்கம்
எப்படியும் இருக்கலாம்

ஆணிண் திமிர்

திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்

அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்




கோயில்
செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.




வேலி
மயில் இறகு புலித்தோல்

மான் கொம்பு யானைத்தந்தம்

அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.

வனவிலங்குகள் காப்பாளர் அப்பா



தளை
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.



காலம்
உன் கையிலா கடிகாரம்?

கடிகாரத்தின் கையில் நீ.




வில்
வீழ்ந்த தமிழன் கதையை

விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது

மேடையில்-

வெட்கம் கெட்ட வில்



கடற்கரை

உடல் நலம் தேடி

காற்றுவாங்க வந்து போகும்

பெரியஇடத்து மாடிகள்

இங்கேயே நோயோடும் நொடியோடும்

ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்




பெண்மை

தெரிவது உனக்கு அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர் நிலவு

புராணமாய் இறைவனின் தலையில்

வரலாறாய் மனிதனின் காலில்.




வெறி
எரியவில்லை அடுப்பு சேரியில்.

போராடினோம்...எரிந்ததுஅ டுப்பல்ல-சேரி




இருள்
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற

நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்...

எங்கேவெளிச்சம்?



வீரம்

உன் கனவில் பாம்பு துரத்துகிறது

நீ ஓடுகிறாய்

குறவன் அவன் துரத்துகிறான்

பாம்பு ஓடுகிறது

வீரம் தொழிலாலிக்கு



தாஜ்மஹால்

காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்

காதலை புதைத்த இடம் காட்டு

எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட

அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?




சாமி

எங்கள் குடிசையில்

அடிக்கடி சாமி ஆடுவாள்

அம்மா ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்

குடிசைக்கே வருகிறது சாமி

மாடிக்கே போகிறது வரம




புலமை

கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக

இவன் உவமைகளும்...முத்துக்க ள்

என்றானே கண்ணீரை



நிழல்
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்

நிமிர்ந்தோம்

இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்




பால்
என்னைத் தெய்வம் ஆக்கினாய்

சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-

உன்பால் வேறுபாடு அழுத்தமானது

சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்




மாவீரன்

இது உயிருக்கு வந்த சாவு அல்ல

சாவுக்கு வந்த உயிர்;



அரண்

என் வலகையில் ஐந்துவிரல்கள்

உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல

அறையவும்தான்




போர்

ஊரில் உங்கள் சுடுகாடு.

சுடுகாட்டில் எங்கள் ஊர்.



தேர்தல்

மாலை வளையல் ழூக்குத்தி

பென்னான எதுகும் இல்லை

எங்கள் குடிசையில்.

அவன் செல்கிறான்

இருக்கிறதாம் எங்களிடம்...

பொன்னான வாக்குகள்



உறுத்தல்

இரவெல்லாம் விழித்திருந்து

எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்...

வாங்கினேன் உறங்குவது எப்படி

இவள் பாயில்?




இனவெறி
மாடுகள் காணாமல்போகும் என்று

தோலில் குறிபோடும் எங்கள் மண்

கொஞ்சநாளாய்...

மனிதர்களையே காணவில்லையே.




மனிதன்

இவன் பசுவின் பாலைக்கறந்தால்

பசு பால் தரும் என்கிறான்.

காகம் இவன் வடையை எடுத்தால்

காகம் வடையை திருடிற்று என்கிறான்

இப்படியாக மனிதன்....




குப்பைத்தொட்டி

அலுவலகத்தில் இருக்கிறவனுக்

இதுகுப்பைதn;தாட்டி

குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு

இதுஅலுவலகம்





மானம்
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?

அவன் கைகளை வெட்டு

கெஞ்சி கோவணம் கட்டாதே

அம்மணமாகவே போராடு. ஏழ்மை

சதை பிடித்து விடுகிறாள்

அழகு நிலையத்தில்

எலும்புக்கைகளால்




அறுவடை

திரைப்படச்சுவரொட்டி யை

தின்றகழுதை கொழுத்தது

பார்த்த கழுதை புழுத்தது



மாடு

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்

வண்டி இழுக்கிறது

கொம்பைமறந்தமாடு




மந்தை

மேடை

தமிழா!

ஆடாய் மாடாய்

ஆனாயடா...நீ என்றேன்

கைதட்டினான்




கண்ணோட்டம்

செருப்பைப்பார்கையில் நீங்கள்

அணிந்திருக்கிறவனின்

காலைப்பார்க்கிறீர்கள ்.

நான் செய்;தவனின்

கையைப்பார்க்கிறேன்



பெண்

ஏடுகளில் முன்பக்கத்தின்

அட்டையில்

வீடுகளில் பின்பக்கத்தில்

அடுப்பங்கரையில்




நிமிர்வு

தேவை பயில்வன்களல்ல வீரர்கள்

உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு

வில்லில் இல்லாத நிமிர்வா?




கோடை

தங்க வளையலைக்கழற்றி

போராளியிடம் தந்தாள்

செலவுக்குவைத்துக்கொ ள்

உங்களில் பலருக்கு

கைகளே இல்லை

எனக்கு எதுக்கு வளையல்




கூண்டு

விடுதலை ஆவாரா சிறையில்

இருந்து என்கணவர்?

சோதிடம கேட்கிறாள்

கூண்டுக்கிளியிடம்





திமிர்

வேலைக்காரன்மேல் பாய்ந்தார்

நாயே பீட்டரை கவனித்தாயா?

இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்

நாய் என்றால் மனிதன




மண்

என்னை என் மண்ணில்

புதைத்தாய் பகைவனே!

என் மண்ணை

எங்கே புதைப்பாய்?





கொலை

ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு...

விரியுமுன்பே பறித்து

இனறவனுக்கு அர்ச்சனை

செய்கிறான்

நூறாண்டு வாழ்ககை வேண்டி

தனக்கு



குடுகுடு

நல்லகாலம் வருகுது

நல்லகாலம் வருகுது..

தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்